image courtesy: BCCI Women twitter  
கிரிக்கெட்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய பெண்கள் அணி..!

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.

மும்பை,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய போபி லிட்ச்பீல்டு அதிரடியாக விளையாடி 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய எலிஸ் பெர்ரி 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

SCROLL FOR NEXT