கிரிக்கெட்

மகளிர் டி20-ல் அதிவேக அரைசதம்... உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்

இதற்கு முன் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

கராச்சி,

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கராச்சியில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா விஸ்வரூபம் எடுத்தார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 16.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்த போது பாத்திமா சனா களம் புகுந்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கிய அவர், எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

நொம்வெலோ சிபாண்டா வீசிய 19-வது ஓவரில் 4, 4, 6, 6, 4 என விளாசி அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் 14 பந்துகளில் 48 ரன்களை எட்டினார். பின்னர் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம், வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

இதற்கு முன் சோபி டிவைன், போப் லிட்ச்பீல்ட் மற்றும் இந்தியாவின் ரிச்சா கோஷ் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 15 பந்துகளில் அடித்து பாத்திமா சனா அதனை முறியடித்துள்ளார்.

Also read:தேசிய இரட்டையர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அபய் சிங், ஜோஸ்னா, ராதிகா ஜோடிகள்

அப்போட்டியில் 19 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சாய்ரா ஜபீன் 50 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

224 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் சாடியா இக்பால் மற்றும் நஷ்ரா சந்துவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 90 ரன்களுக்கு சுருண்டது. பந்துவீச்சிலும் அசத்திய கேப்டன் பாத்திமா சனா 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.