கிரிக்கெட்

அதிவேக சதம்... 18 ஆண்டுகால சாதனை காலி - ஜெயசூர்யாவை சமன் செய்த திலக் வர்மா

18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார்.

சென்னை,

அகமதாபாத்தில் நடந்த நேற்றைய 30-வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக திலக் வர்மா வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூர்யா 45 பந்துகளில் சதம் அடித்ததே மும்பை அணியின் அதிவேக சதமாக இருந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார்.

அதிவேக சதங்கள் பட்டியல் (MI):

திலக் வர்மா & ஜெயசூர்யா - 45 பந்துகள்

கேமரூன் கிரீன் - 47 பந்துகள் (2023)

சூர்யகுமார் யாதவ் - 49 பந்துகள் (2023)

Also read:"அதுதான் அடுத்த இலக்கு" - ஆர்சிபி வீரர் ராசிக் சலாம்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை (மலேவர், டி காக், சூர்யகுமார்) இழந்து தடுமாறியது. காகிசோ ரபாடா ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தார். இந்த இக்கட்டான நிலையில் இணைந்த திலக் வர்மா மற்றும் நமன் தீர் (45 ரன்கள்) ஜோடி 52 ரன்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தது.

தொடக்கத்தில் நிதானமாக ஆடிய திலக், பிறகு அதிரடி காட்டினார். 33 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அடுத்த 12 பந்துகளில் சதத்தை எட்டினார். இறுதியில் 101* ரன்களுடன் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தார். திலக் வர்மாவின் இந்த அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 199/5 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்த இலக்கை எட்ட முடியாமல் குஜராத் 100 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.