அகமதாபாத்,
அகமதாபாத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை திலக் வர்மாவின் அதிரடி சதத்தால் 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 200 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் 100 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. இப்போட்டிக்கு பின் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "மிடில் ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டோம். இந்த பிட்ச்சில் 160-170 ரன்களே சரியான இலக்காக இருந்திருக்கும். ஆனால் 199 ரன்கள் என்பது மிக அதிகம். பிட்ச் சற்று மெதுவாக (Slow) இருந்ததால், சரியான லெந்த்தில் பந்துவீசுவது முக்கியம். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். சில பந்துகள் தாழ்வாகச் சென்றன, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை," என்றார்.
மேலும், "இந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். இது ஒரு சிறிய சறுக்கல் தான். அடுத்த சில போட்டிகள் வெளி ஊர்களில் நடக்கவுள்ளன. அதில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம் என நம்புகிறேன்," என்று கில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் தோல்வியால் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்குச் சரிந்துள்ளது (6 போட்டிகளில் 3 வெற்றிகள்). அடுத்த போட்டியில் 24-ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது.