லக்னோ,
லக்னோவில் நேற்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.
பின்னர் 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 12-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது பேட்டிங் செய்ய தயாராக இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் களம் இறங்காமல் இருந்தது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பண்ட்டிற்குப் பதிலாக நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத் மற்றும் முகுல் சௌத்ரி ஆகியோர் களம் இறங்கினர். இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டிங் செய்யாதது குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், "நானும் பேட்டிங் செய்யத் தயாராகத்தான் அமர்ந்திருந்தேன். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை போதிய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர்களுக்கு இந்த சூழ்நிலையில் வாய்ப்பு கொடுத்து சோதித்துப் பார்க்கலாமே என்று யோசித்துதான் நான் களம் இறங்கவில்லை" என்றார்.
இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் 3 மற்றும் 4-வது இடங்களில் களம் இறங்கிய பண்ட், அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்துப் பேசுகையில், "தொடக்கத்திலிருந்தே மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகிய இரு வெளிநாட்டு வீரர்களை ஓப்பனிங் இறக்க வேண்டும், நிக்கோலஸ் பூரனை 3-வது இடத்தில் இறக்க வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. சிஎஸ்கே-வுக்கு எதிராக அது சிறப்பாக ஒர்க்அவுட் ஆனது. ஆனால், வீரர்களின் காயம் மற்றும் பார்ம் அவுட் காரணமாக இந்தத் திட்டத்தை இந்த சீசனில் எங்களால் முழுமையாகத் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது" என்றார்.