டர்பன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) டர்பனில் தொடங்குகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அன்னேரி டெர்க்சன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "இந்தியாவுக்கும் எங்களுக்குமான போட்டி போர் போன்றது. 2025 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்ற வலி இன்னும் குறையவில்லை. அந்தத் தோல்விக்குப் பழிவாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு. வரும் டி20 உலகக்கோப்பைக்குத் தயாராக இந்தத் தொடர் மிகச்சிறந்த பயிற்சியாக அமையும்" என்றார்.
மேலும், இந்திய அணியின் பேட்டிங் பலம் குறித்துப் பேசிய அவர், "ஸ்மிருதி மந்தனா எங்களுக்கு எதிராக எப்போதும் அதிக ரன்களைக் குவிக்கிறார். அவரை ரன் அடிக்க விடாமல் தடுப்பதே எங்கள் முதல் இலக்கு. பந்துவீச்சாளர்கள் ஒரு அங்குலம் தவறினாலும் அவர் பவுண்டரி அடித்துவிடுவார். அதேபோல் ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். இந்திய அணியின் பந்துவீச்சும் அனுபவம் வாய்ந்தது," என்றார்.