குயின்ஸ்லாந்து,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். இந்த தகவலை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதி செய்துள்ளது.
கிரிக்கெட் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் -யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 133 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவரின் மறைவுக்கு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் மற்றும் சைமண்ட்ஸ் ஒன்றாக இணைந்து விளையாடி உள்ளனர்.
சச்சின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்-யின் மறைவு நம் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக மட்டுமல்லாமல், களத்தில் சிறந்த துடிப்பான வீரராகவும் விளங்கியவர்.
மும்பை இந்தியன்ஸில் நாங்கள் ஒன்றாக இருந்த நேரங்கள் இனிமையானவை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், என்று டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.