கிரிக்கெட்

கெயில் - கோலி இல்லை... ’ஐபிஎல் வரலாற்றில் மிக ஆபத்தான ஓப்பனர்கள் அவர்கள்தான்’ - புஜாரா

வருகிற 28-ம் தேதி பெங்களூரு அணி ஐதராபாத்தை எதிர்கொண்டு முதல் போட்டியை விளையாட உள்ளது.

சென்னை,

ஐபிஎல் வரலாற்றில் மிக ஆபத்தான ஓப்பனர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா என இந்திய முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களில் மிகவும் ஆபத்தான ஓப்பனர்களாக இவர்கள் உருவெடுத்துள்ளனர் என்றும், முதல் பந்திலிருந்தே எதிரணி பந்துவீச்சாளர்களை தாக்கும் அவர்களின் ஆட்டமே ஐதராபாத் அணியை 250+ ரன்கள் எளிதாக அடைய உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஓப்பனிங் ஜோடியாக கிறிஸ் கெயில்-விராட் கோலி நினைவுக்கு வரும் நிலையில், அதைவிட அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி மிகவும் ஆபத்தானது என புஜாரா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பந்துவீச எந்த பந்துவீச்சாளரும் விரும்பமாட்டார்கள் என்றும், அந்த அளவுக்கு எதிரணியில் பயத்தை உருவாக்குகிறார்கள் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டானால், ஐதராபாத் அணிக்கு ரன்கள் சேர்ப்பதில் சிரமப்படும் என்றும், அதனால் எதிரணிகள் இவர்களை விரைவில் அவுட் செய்ய திட்டமிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சு சற்று பலம் குறைவாக இருப்பதாகவும், டாப் ஆர்டர் தோல்வியடைந்தால் எதிரணி எளிதாக ஆதிக்கம் பெறும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஐபிஎல் 2026 சீசனில், ஐதராபாத் அணி வருகிற 28-ம் தேதி நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை எதிர்கொண்டு முதல் போட்டியை விளையாட உள்ளது.