அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிக்கு முன்பாக ஸ்டேடியத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஷ் நெஹ்ராவை சந்தித்து அவரது காலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
நேக்ரா உடனடியாக அவரை தூக்கி எழுப்பி, கட்டிப்பிடித்து தோளில் தட்டி பாராட்டினார். களத்தில் எதிரணியினரிடமும், களத்துக்கு வெளியே பெரியவர்களிடமும் வைபவ் காட்டிய மரியாதைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே குஜராத் அணிக்கு எதிராகத் தான் சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பிரமாண்ட சாதனையைப் படைத்தார். இந்த ஆண்டிலும் அவர் அதே சிறப்பான பார்மில் உள்ளார். சமீபத்தில் சென்னை அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.