சென்னை,
ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் தனது 15வது பிறந்தநாளை கொண்டாடினார். பொதுவாக ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் விளையாடும் வீரர்களின் பிறந்தநாளை அணியினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் வைபவ் விஷயத்தில் அது நடக்க வில்லை. இதற்கான காரணத்தை அவர் தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி கடந்த 27-ம் தேதி 15 வயதை எட்டிய நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக, அணியுடன் கேக் வெட்டும் கொண்டாட்டத்தை தவிர்த்து சீக்கிரமே தூங்கச் சென்றதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “அன்று கேக் வெட்ட வேண்டியதுதான். ஆனால் நான் சீக்கிரமே தூங்கிவிட்டேன். எல்லாரும் முகத்தில் கேக் தடவி விடுவார்கள் என பயந்து, அதிலிருந்து தப்பிக்க முன்பே தூங்கிப் போய்விட்டேன்,” என்று கூறினார். சென்னைக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிவேக அரைசதம் ஆகும்.