கிரிக்கெட்

2008-ல் விராட் கோலியை டெல்லி அணி வாங்காதது ஏன் ? - 18 ஆண்டுகளுக்குப் பின் ரகசியத்தை உடைத்த சேவாக்

டெல்லி தவறவிட்ட விராட் கோலியை ஆர்.சி.பி அணி வாங்கியது.

புது டெல்லி,

ஐ.பி.எல். வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அடையாளமாகத் திகழ்பவர் விராட் கோலி. ஆனால், 2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். ஏலத்தின் போது, கோலியை அவரது சொந்த ஊர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிடல்ஸ்) ஏன் எடுக்கவில்லை என்பது பலருக்கும் ஒரு மர்மமாகவே இருந்தது. தற்போது அதற்கான காரணத்தை முன்னாள் கேப்டன் சேவாக் விளக்கியுள்ளார்.

இது குறித்து ஷேவாக் கூறியதாவது: "2008-ம் ஆண்டு தொடக்க சீசனில் நான் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போது எங்கள் அணியில் கவுதம் கம்பீர் மற்றும் நான் தொடக்க வீரர்களாக இருந்தோம். எங்களுக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் மற்றும் திலகரத்னே தில்ஷன் போன்ற திறமையான வீரர்கள் இருந்தனர். அவர்களை நாங்கள் 3 மற்றும் 5-வது வரிசையில் களமிறக்கினோம். மனோஜ் திவாரி 4-வது இடத்தில் இருந்தார்.

அந்தச் சமயத்தில் விராட் கோலியும் 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடும் பேட்ஸ்மேனாகவே இருந்தார். எங்களிடம் ஏற்கனவே டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருந்ததால், கோலியை அணியில் சேர்ப்பதற்கு இடமே இல்லை. எங்களுக்கு அப்போது ஒரு பந்துவீச்சாளர் தான் தேவையாக இருந்தது. எனவே, கோலியைத் தவிர்த்துவிட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பிரதீப் சாங்வானைத் தேர்வு செய்ய முடிவு செய்தோம்," என்று தெரிவித்தார்.

கோலிக்கு பதிலாகத் தேர்வு செய்யப்பட்ட பிரதீப் சாங்வான், டெல்லி அணிக்காக 3 சீசன்கள் விளையாடினார். அவர் விளையாடிய 28 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடினார்.

மறுபுறம், டெல்லி தவறவிட்ட விராட் கோலியை ஆர்.சி.பி அணி வாங்கியது. இன்று ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும், தொடரின் மிகப்பெரிய ஜாம்பவானாகவும் கோலி உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.