கால்பந்து

பிபா உலகக் கோப்பைக்கு முன்... மெக்சிகோவில் பீலேவுக்கு 31 அடி உயர சிலை திறப்பு

2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் காலமான பீலே, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றார்.

குவாடலஹாரா,

உலக கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படும் மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் நினைவாக மெக்சிகோவில் 31 அடி உயரமுள்ள பிரமாண்ட சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

9.5 மீட்டர் (31 அடி) உயரம் கொண்ட இந்த சிலை, பீலேவின் மகத்தான சாதனைகளையும், உலக கால்பந்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு தனது 82-வது வயதில் காலமான பீலே, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றார். அவர் வென்ற உலகக் கோப்பைகளில், 1970-ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பையும் ஒன்று.

இதற்கிடையில், வரவிருக்கும் 2026 பிபா உலகக் கோப்பை தொடரில் குவாடலஹாராவில் முதல் சுற்றின் நான்கு முக்கிய போட்டிகள் நடக்க உள்ளது.

ஜூன் 12: தென்கொரியா - செக் குடியரசு

ஜூன் 18: மெக்சிகோ - தென்கொரியா

ஜூன் 23: கொலம்பியா - காங்கோ

ஜூன் 26: உருகுவே - ஸ்பெயின்

2026 பிபா உலகக்கோப்பை போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெற உள்ளன.