பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 3-வது முறையாக தங்க பதக்கம் வென்று இளவேனில் சாதனை

இந்தியாவின் இளவேனில் (633.7), ஆர்யா (630.3) மற்றும் மேகனா (628.6) குழு பிரிவில் அதிக புள்ளிகளை பெற்றனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளுக்கான போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாடினர். இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இறுதி சுற்று போட்டி நேற்று நடந்தது.

இதில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் 252 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றார். இதனால் அவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3-வது முறையாக தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் விளையாடிய மற்றொரு வீராங்கனை மேகனா சஜ்ஜனார் 229.5 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.

இதேபோன்று குழு பிரிவில் இந்தியாவின் இளவேனில் (633.7), ஆர்யா (630.3) மற்றும் மேகனா (628.6) புள்ளிகளை பெற்றனர். இதனால், தகுதி சுற்றில் மொத்தம் 1892.6 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். கலப்பு குழு போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.