பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர் மற்றும் உலக தர வரிசையில் 59வது இடம் பெற்றுள்ள ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபர் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டில் கடுமையாக போராடி பெடரர் 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். எனினும் அடுத்த செட்டை 6-7(3) என்ற செட் கணக்கில் டோமினிக் கைப்பற்றினார்.
இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த விளையாட்டில் பெடரருக்கு கடுமையான போட்டி காத்திருந்தது. இதில், 3வது செட்டை 7-6(4) என்ற புள்ளி கணக்கில் பெடரர் கைப்பற்றினார். அதன்பின்னர் 4வது செட்டில் 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று டோமினிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகும் முடிவை ரோஜர் பெடரர் வெளியிட்டு உள்ளார். காலிறுதிக்கு முந்தின போட்டியில் மேட்டியோ பெர்ரட்டினியுடன் விளையாட இருந்த நிலையில், அவர் இதனை அறிவித்து உள்ளார்.
தொடக்க ஆட்டத்தில் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்தினார். 2வது சுற்றில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான மரின் சிலிக்கை வெற்றி பெற்றார். 3வது சுற்றில் ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், என்னுடைய அணியினருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின்பு, பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து விலகும் முடிவை நான் இன்று எடுத்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
39 வயதுடைய பெடரருக்கு கடந்த ஆண்டு இரண்டு முறை முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய பின்பு அவர் தற்போது பிரெஞ்சு ஓபனில் விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.