டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: மழையால் ஜானிக் சின்னெர் - மெத்வதேவ் மோதிய அரையிறுதி ஆட்டம் பாதியில் ரத்து

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னெர் மற்றும் டேனில் மெத்வதேவ் மோதினர்.

ரோம்,

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள ஸ்டாடியோ சென்ட்ரல் மைதானத்தில் சர்வதேச இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரையிறுதி ஆட்டத்தில், இத்தாலியின் நட்சத்திர வீரர் ஜானிக் சின்னெர் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் மோதினர்.

வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில், ஜானிக் சின்னெர் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, திடீரென மைதானத்தில் கனமழை கொட்டத் தொடங்கியது. இதனால் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி அளவில் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

முதலில் ஆட்டம் இரவு 10:15 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டநிலையில், மழையின் வேகம் குறையாததால் அதனை 10:45 மற்றும் 11:00 மணி என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, மழை நிற்குமாறான அறிகுறி தென்படாததால் அன்றைய தினத்திற்கான ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, இந்த அரையிறுதி ஆட்டம் நேற்று எங்கிருந்து நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்து மீண்டும் இன்று மாலை தொடங்கி நடத்தப்பட உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்வார். உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் காஸ்பர் ரூட், மற்றொரு அரையிறுதியில் லூசியானோ டார்டேரியை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.