பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: சிம்ம வாகனத்தில் கற்பக விநாயகர் வீதியுலா

விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இரண்டாம் நாளான நேற்று காலையில் வெள்ளி கேடய வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவின் மூன்றாம் நாளான இன்று பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் நாள் இரவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் வெள்ளி குதிரை வாகனத்திலும் உற்சவர் எழுந்தருள்கிறார். 9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com