

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யா இயக்கிய 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இந்த இரண்டாம் பாகம், கடந்த 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையை மாற்றிய முக்கிய தருணம் குறித்து விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில், 'நம்பிக்கையை மட்டும் இழக்காதே' என்று அமீர் கான் என்னிடம் கூறினார். அந்த ஒரு அறிவுரைதான் என் மனநிலையை முழுவதுமாக மாற்றியது. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை அது எனக்குக் கொடுத்தது," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சவால்கள் நிறைந்த காலத்திலும் அந்த அறிவுரையே தன்னை முன்னோக்கி நகர்த்தியதாகவும், தற்போது கிடைத்துள்ள வெற்றி மேலும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.