சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி

நடிகை கீர்த்தி குல்ஹாரி சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.43 லட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் மோசடியில் சிக்கிய பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி
Published on

மும்பை,

பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் நடிகை கீர்த்தி குல்ஹாரி, 'உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்', 'மிஷன் மங்கல்', 'போர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பிரபலமானவர். தற்போது அவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.43 லட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கை

கடந்த 24-ஆம் தேதி இரவு, அந்தேரி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்றுகொண்டிருந்தபோது, கீர்த்தி குல்ஹாரியின் செல்போனுக்கு வங்கியிலிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது கடன் அட்டையைப் பயன்படுத்தி 'ஏரோமெக்சிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு 2,525 அமெரிக்க டாலர் வெளிநாட்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியில் நடிகை

இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி குல்ஹாரி, உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விவரங்களை உறுதிப்படுத்தினார். அப்போது, அவரது கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு தனித்தனி வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.2.43 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலும் பணப்பரிவர்த்தனை நடைபெறாமல் தடுக்க வங்கி அதிகாரிகள் அவரது கடன் அட்டையை உடனடியாக முடக்கினர்.

சைபர் போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக கீர்த்தி குல்ஹாரி மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனது கடன் அட்டை எண், ரகசிய எண் அல்லது ஓ.டி.பி. உள்ளிட்ட எந்த ரகசிய தகவலையும் அவர் யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com