ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறை உதவி இயக்குநர் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி,ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை மேல் முறையீட்டு ஆணையத்தலைவர் பிரதீப் குமார் உபாத்தியா ஆஜர் ஆவதற்கு விலக்களிக்கவும் மறுத்துவிட்டது.






