சவால்களை தாண்டி மீண்டும் திரைப்பயணத்தில் கவனம் செலுத்தும் நடிகை ஜாக்குலின்

சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
Published on

இலங்கையைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் அழகிப் பட்டம் வென்றவருமான ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில், தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்றன.

தற்போது தனது திரைப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சோகமான அத்தியாயங்கள் இருக்கும். எனது வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட பல அனுபவங்கள் உள்ளன. இருப்பினும் அவற்றை எல்லாம் கடந்து வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையின் சோகமான சம்பவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்க முடியும்” என்றார். ஜாக்குலின் பெர்னாண்டஸின் இந்த கருத்து திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com