தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம்  அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

செப். 1 முதல் சினிமா தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்த ஸ்டிரைக் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் நிறைவடைந்த பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன.

இந்த நடைமுறையை செப். 1 முதல் அமல்படுத்த வேண்டும் என்றும், இதனை உறுதி செய்து தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அளித்தால் மட்டுமே புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்றும் இரு சங்கங்களும் முடிவு செய்திருந்தன. இதையடுத்து, செப். 1 முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும், புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

ஸ்டிரைக் ஒத்திவைப்பு

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டிரைக் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது , தமிழ்த் திரைப்படத்துறையில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு அரசு கவனத்திற்க கொண்டு சோர்க்கும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து கடந்த 26.08.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் திரு.ஏ.ராஜ்மோகன் அவர்களை சந்தித்து திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்து மனுவாக அளித்துள்ளோம். அந்த மனுவினை பரிசீலித்த அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்பட வெளியீட்டில் என்ன நடைமுறை உள்ளதோ அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகியோரை தமிழ்நாடு அரசு அழைத்து மேற்படி பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தற்போது வேலை நிறுத்தம் என்பது வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்

மேற்படி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்ததின் அடிப்படையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து செப்டம்பர் 1-முதல் அறிவித்த (புதிய திரைப்படங்கள் வெளியீடு படப்பிடிப்பு பணிகள், போஸ்ட் புரொடக்ஷன்) வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com