

ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்தும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் வன்மப் பதிவுகள் குறித்தும் நடிகர் விஷ்ணு விஷால் பேசியிருக்கிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி 2’ படம் கடந்த 3-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 3 நாட்களில் ரூ 22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது சர்ச்சை கிளப்பி இருந்தது. விஷ்ணு விஷால் விஜய் குறித்து பேசியதற்கு, “எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு, விஜய்யை மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம்” என விஜய் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வந்தனர்.
இப்படம் சிறப்பு குழந்தைகளுக்காக சென்னை ரோகிணி திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் ‘தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் படமாக `கட்டா குஸ்தி 2' மாறியுள்ளது. ஆனால் தவெக கட்சியை சேர்ந்த ஒரு நபர் மட்டும் தவறாக பேசி இருக்கிறாரே, அதை நீங்கள் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?’ என கேட்கப்பட்டது.
விஷ்ணு விஷால் அதற்கு பதில் அளித்த போது “அதை நான் பார்த்தேன் கஷ்டமாக இருந்தது என்பதை மட்டும் தான் சொல்வேன். அதை பற்றி விவரமாக பேசி, இதை ஒரு அரசியலாக்க நான் விரும்பவில்லை. படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நான் சமூக வலைத்தளங்களில் உள்ள வன்மத்தை பற்றி நான் பேசி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், ஆன்லைன் வன்மம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் நிற்க வேண்டும். இந்த முறை நான் நின்றேன், இனிமேலும் நிற்பேன். ஒருவரை குறிவைத்து தாக்குவது சமூகத்திற்கே கேடானது.
நான் ரெட் ஜெயண்ட்டை ஒரு சினிமா நிறுவனமாக மட்டும்தான் பார்க்கிறேன். அவர்கள் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு 2013ல் இருந்து பழக்கம். 13 ஆண்டு கால நட்பு. என்னுடைய அனுபவம் மிகவும் அன்பானதாக தான் இருந்தது. அதனால் இந்தப் படத்தை அவர்கள் மூலமாக வெளியிட திட்டமிட்டேன். திரும்பவும் சொல்கிறேன் இதை அரசியலாக மாற்றாதீர்கள். இதை அனைவரும் பாசிட்டிவாக அணுக வேண்டும் என்று விரும்புகிறேன். திரைப்படமே மிகவும் பாசிட்டிவாக இருப்பதால்தான் குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.