

‘காந்தாரா’படத்துக்கு பிறகு, இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக உயர்ந்திருக்கிறார், ருக்மிணி வசந்த். ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மதராசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை நடிகை ருக்மணி வசந்த் கொள்ளை கொண்டார். தற்போது அவர் நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் 2 புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் பச்சை நிற பிகினியில் இருப்பது போன்ற, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவிட்ட அவர், “என்னைப் போன்று ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதை நானும் என் குழுவினரும் கண்டறிந்துள்ளோம். இந்த படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் புனையப்பட்டவை என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன். இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பொறுப்பற்ற செயலாகும். மேலும் இது கடுமையான தனியுரிமை மீறலாகும். நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்த படங்களை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுப்போம். இதுபோன்ற பதிவை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.