அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலம்..!

அழகர்கோவில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் இன்று மாலை திறக்கப்படுகின்றன.
அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் கோலாகலம்..!
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சிறப்பு மிக்க ஆடி பெருந்திருவிழா கடந்த 21-ஆம் தேதி காலை மங்கள இசையுடன் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. உற்சவர் கள்ளழகர் எனப்படும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

பலத்த பாதுகாப்பு

தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை கண்காணிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சிறப்பு வழிபாடு

இன்று மாலை ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு அழகர்கோவில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சந்தனம் சாத்துப்படி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே

18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com