

நாகப்பட்டினம்,
ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நாகை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்ம வாகன காலசம்ஹார பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகா கால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.