

தென்திருப்பேரை,
நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.
நேற்று முன்தினம் 9ம் நாள் திருவிழாவில் நம்மாழ்வார் தேரில் எழுந்தருளி தேர்திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு மார்ச் 7ம்தேதி 10ம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
உற்சவர் பொலிந்து நின்றபிரான் அலங்காரம் செய்யப்பட்டு 7 மணிக்கு தெப்பக்குளத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். 7.45 மணிக்கு தெப்ப உற்சவம் தொடங்கியது. தெப்பத்தில் எழுந்தருளிய பகவான், தெப்பக்குளத்தின் நீராழி மண்டபத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்குளத்தின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இன்று 8ம்தேதி 11ம் நாள் திருவிழாவில் இரவில் நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எமுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 9ம்தேதி 12ம்நாள் திருவிழாவில், மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 10ம்தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் சதீஷ், ஆய்வாளர் நம்பி, ஏரல் தாசில்தார் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் காயத்ரி, அர்ச்சகர்கள் கண்ணன், பாலாஜி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.