

மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அங்காளம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அதன்படி வைகாசி மாதத்திற்கான அமாவாசை வழிபாடு இன்று நடக்கிறது. அமாவாசையை முன்னிட்டு இன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 11.10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜையுடன் உற்சவம் துவங்கி, ஊஞ்சல் தாலாட்டு நடைபெறும். அப்போது தாலாட்டு பாடல்களை பாடி அம்மனை வழிபடுவர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.