பாகவதாஷ்டமியில் பைரவர் வழிபாடும் பலன்களும்

சனி பகவனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி தோஷம் நீங்கவும் கால பைரவரை வணங்கலாம்.
பாவங்கள் போக்கும் பாகவதாஷ்டமி, பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பைரவர் வழிபாடு
Published on

பாகவதாஷ்டமி

தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிவபெருமானின் அம்சமான கால பைரவரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உண்டு. அந்த வகையில் ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ‘பாகவதாஷ்டமி’ எனப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், சிவனின் அம்சமான பைரவரையும் வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆனி மாதம் தேய்பிறை அஷ்டமி. நாளை சிவாலயம் சென்று காலையில் சிவபெருமானையும், மாலையில் கால பைரவரையும் வழிபட்டு பிரார்த்தனை செய்தால் பாவங்கள் பறந்தோடும், கவலைகள் காணாமல் போகும், கடன் தொல்லையில் இருந்தும் எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் பக்தர்கள். அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்குவது போல், தட்சிணாமூர்த்தியையும் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

பைரவரை வழிபடுவது எப்படி?

பைரவருக்கு செந்நிற மலர்கள், அரளி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்யலாம். வெண் பொங்கல், மிளகு வடை நைவேத்தியம் செய்தும், வடை மாலை சார்த்தியும் வழிபடலாம். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபடலாம்.

சகல யோக பாக்யங்கள் கூடிவரும். சனி பகவனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி தோஷம் நீங்க கால பைரவரை வணங்கலாம்.

வழிபடும் நேரம்

தேய்பிறை அஷ்டமி திதி அன்று மாலை அல்லது இரவு வேளையில் பைரவரை வழிபடவேண்டும். குறிப்பாக, ராகு காலத்தில், அதாவது பிற்பகல் 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள் பைரவரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

பலன்கள்

பாகவதாஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும், பில்லி சூனியம் அகலும், திருமண தடை நீங்கும், எம பயம் அகலும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி பைரவரின் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

X

Daily Thanthi
www.dailythanthi.com