

திருமலை,
திருமலையில் உள்ள தங்குமிடங்கள் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த 32 போலி இணையதளங்களை கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு தெரிவித்தார்.
இதுகுறித்து திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரிசனம், தங்குமிடம், சிறப்பு நுழைவு தரிசனம், சேவை டிக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளை தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி மூலம் வழங்கி வருகிறது. ஆனால், பக்தர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கொண்டு, சில சைபர் குற்றவாளிகள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள், மொபைல் செயலிகள், சமூக வலைதள இணைப்புகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ttddevasthanam.online என்ற போலி இணையதளம் மூலம் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான தரிசனம், சேவை டிக்கெட்டுகள் கிடைப்பதாக பொய்யான தகவல்களை வெளியிட்டு, பக்தர்களிடம் இருந்து பணம் வசூலிக்க முயற்சிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருப்பதி மாவட்ட காவல் துறையானது, தேவஸ்தான பறக்கும் படை பிரிவுடன் இணைந்து, இதுபோன்ற போலி இணையதளங்கள், சமூக வலைதள இணைப்புகள், சந்தேகத்துக்கிடமான இணைய செயல்பாடுகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
இதுவரை திருமலையில் உள்ள பல்வேறு விருந்தினர் மாளிகைகள், தங்குமிடங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்ட 32 போலி இணையதளங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட டொமைன் சேவை வழங்குனர்களின் ஒத்துழைப்போடு அவற்றை முடக்கி உள்ளது.
இருப்பினும், சைபர் குற்றவாளிகள் புதிய பெயர்கள், புதிய டொமைன்களுடன் மீண்டும் போலி இணையதளங்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால், திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் ஆன்லைன் முன்பதிவுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பதி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.