

திருத்தணி,
ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கிருத்திகை. விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் பொது தரிசன வழியில் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மலையடிவாரத்தில் இருந்து கோவில் பஸ்கள் மூலம் பக்தர்கள் அனைவரும் மலைக் கோவிலுக்கு சென்று வந்தனர். அரக்கோணம் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.