

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவங்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கியப் பண்டிகைகளுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் பாரம்பரிய தூய்மைப்பணி செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபு.
அவ்வகையில் வரும் 17-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ள நிலையில், இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இப்பணி தொடங்குவதற்கு முன்னதாக சிறப்பு பூஜை செய்து மூலவரை ஒரு வஸ்திரத்தால் மூடினர். பின்னர் பரிமளம் என்று அழைக்கப்படும் ஒரு புனிதமான நறுமணக் கலவை ஆலயம் முழுவதும் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் மூலவர் கருவறை, தங்கக் கொடிமரம், பலிபீடம், தரைதளம், மேற்கூரை, பூஜை பொருட்கள், தூண்கள் போன்றவற்றை தூய நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தூய்மைப்பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட வஸ்திரம் அகற்றப்பட்டது. ஆலய அர்ச்சகர்கள் சாஸ்திர விதிமுறைகளுக்கு இணங்க, சிறப்பு பூஜைகளை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தனர். அதன்பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.