

திருப்பதி,
திருப்பதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவது, அங்கு பக்தர்களை தங்க வைப்பதற்காக தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் அதிகாரி தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பக்தர்களை தங்க வைப்பதற்கான இடங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வெங்கையா சவுத்ரி பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. கூட்ட நெரிசல் மேலாண்மை, பக்தர்களின் வசதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை குறித்து திருப்பதி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
திருப்பதி நகரின் முக்கிய இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடங்கள், பக்தர்களை தங்க வைப்பதற்கான இடங்கள், அன்னப்பிரசாதம், குடிநீர், கழிவறைகள், பொதுப் போக்குவரத்து வசதிகள், பெரிய திரைகள் அமைக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல், பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க கட்டளை, கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் கூட்ட மேலாண்மை ஆகியவற்றை சீராக மேற்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அலிபிரி டோல்கேட், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். அத்துடன் சோதனைகளும் நடத்தப்படும். பக்தர்களுக்கு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும்.
திருமலையில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிக்காக சுமார் 3 ஆயிரம் நவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாகனங்களின் பதிவெண்ணை தானியங்கி முறையில் பதிவு செய்வதுடன், பக்தர்களை அடையாளம் காண்பதற்காக முக அங்கீகார அமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட உள்ளன. தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.