

திருப்பதி,
திருப்பதியை அடுத்த திருச்சானூரில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. கோவிலுக்கு பின்னால் உள்ள பிரமாண்ட தெப்பக்குளத்தில் இந்த விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான 25-ந் தேதி கிருஷ்ண சுவாமி, ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடனும், மறுநாள் சுந்தரராஜ சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதனை தொடர்ந்து 3 நாட்களும் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
ஜூன் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும். 28-ந் தேதி கஜ வாகன சேவையும், ஜூன் 29-ந் தேதி கருட வாகன சேவையும் நடக்கிறது.
மேலும், தினமும் பக்தி, ஆன்மிகம், இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.