விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு.. கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா, மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் இன்று மழை பெய்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருகை தந்து விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கும் உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை முதலே மணக்குள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் இன்று அதிகாலை இடியுடன் லேசான மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு, 3 மணிக்கு பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டது. இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com