

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான வண்டார்குழலி அம்பிகை சமேத வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புத்திர பாக்கியம் அருளும் புத்திர காமேஸ்வரர் இங்கு எழுந்தருளியிருப்பது, இக்கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும்.
ஆண்டுதோறும் பங்குனி அமாவாசை நாளில் கோவிலின் தீர்த்தமான புத்திர காமேஸ்வரர் தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி வண்டார்குழலி அம்பிகை மற்றும் வடாரண்யேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு ஹோம பூஜைகளுக்கு பிறகு புத்திர காமேஸ்வரர் தீர்த்தத்தில் அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாபொடி, திரவிய பொடி, பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் மகா தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தம்பதியினராய் கலந்துகொண்டு நீராடி வழிபட்டனர்.