கடினமான காலத்தில் உண்மையாக என்னை அணுகிய ஒரே நபர் தோனி தான் - விராட் கோலி உருக்கம்

தோனி மீது தனி மரியாதையும், அன்பும், பாசமும் கொண்டவராக கோலி உள்ளார்.
கடினமான காலத்தில் உண்மையாக என்னை அணுகிய ஒரே நபர் தோனி தான் - விராட் கோலி உருக்கம்
Published on

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி. அவருக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையான நட்பு குறித்து பலமுறை பொதுவெளியில் கூறி சிலாகித்துள்ளார். அந்த அளவிற்கு தோனி மீது தனி மரியாதையும், அன்பும், பாசமும் கொண்டவராக கோலி உள்ளார்.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் நிகழ்ச்சியின் விராட்கோலி கலந்து கொண்டார். அதில் அவர் தோனியுடனான தனது நெருக்கம் பற்றிவிராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது ,

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எனக்கு ஏற்பட்ட கடிமான நேரத்தில், நான் இருந்த அந்த சூழலில், அனுஷ்கா மற்றும் என்னுடைய சிறுவயது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினரைத் தவிர… உண்மையாக என்னை அணுகிய ஒரே நபர் எம்எஸ் தோனி மட்டுமே. அவர் தான் என்னை முதலில் அணுகினார்.

தோனியை அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொண்டுவிட முடியாது. நீங்கள் ஏதேனும் ஒரு நாளில் தோனிக்கு தொலைபேசியில் போன் செய்தீர்கள் என்றால், 99 சதவீதம் அவர் போனை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் போன் பார்ப்பதே அரிது. ஒரு முறை அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் வலிமையானவராக இருக்கும் போதும். வலிமையானவர் என்று பிறரால் அறியப்படும்போதும் உங்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூட எல்லோரும் மறந்துவிடுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தோனியின் அந்த குறுஞ்செய்தி எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது . ஏனென்றால் என்னை எப்போதும் எல்லோருமே துணிச்சலானவர், நம்பிக்கையானவர், வலிமையானவர், உணர்வுரீதியாக வலுவானார், எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர் என்று அறிகின்றனர். ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் யாராக இருந்தாலும் இரண்டு அடி பின்னோக்கிச் சென்று நம்மை நாமே நலம் அறிவது அவசியம். அது சறுக்கல் இல்லை. அதை நான் அன்று உணர்ந்தேன்.

பல நேரங்களில் இங்கே சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி நீண்ட காலமாக வலுவாக இருந்த வீரர்கள் தங்களின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால்தான் நான் தோனி எனக்குச் சொன்னதை இங்கே எல்லோருடனும் பகிர்கிறேன். அவருக்கு நான் எதிர்கொண்டுள்ள நிலை புரியும் ஏனெனில் கடந்த காலங்களில் அவரே அந்தச் சூழலை எதிர்கொண்டிருக்கிறார்.

. இவ்வாறு விராட் கோலி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com