தாம்பத்திய குறைபாடா..? சித்த மருத்துவம் இருக்க பயமேன்..!

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் புகைப்பழக்கம், போதை பழக்கம், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
தாம்பத்திய குறைபாடா..? சித்த மருத்துவம் இருக்க பயமேன்..!
Published on

ஒரு சிலருக்கு திருமணம் ஆன சில வருடங்களிலேயே தாம்பத்திய குறைபாடு ஏற்படுகிறது. ஆர்வம் இருந்தாலும் அவர்களால் சரியாக தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த குறைபாட்டிற்கு விறைப்புத்தன்மை செயலிழப்பு (எரக்டைல் டிஸ்பங்சன்-இ.டி) என்று மருத்துவமுறையில் குறிப்பிடுவார்கள். இந்த பிரச்சினைக்கு வயது வித்தியாசம் கிடையாது. இந்த பிரச்சினை நீண்டநாட்களாக தொடர்ந்தால் அது, கணவன்-மனைவிக்கு இடையே உள்ள குடும்ப உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம், ரத்த தமனிகள் கடினமடைதல், நீரிழிவு நோய், நரம்பு மண்டல காரணங்கள், சில நோய்களுக்கு எடுக்கும் மருந்துகளால் ஆண்மைக் குறைவு வரலாம். ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் தூண்டப்பட்ட தாம்பத்ய குறைவு, புரோஸ்டேட் சுரப்பி பாதிப்புகள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், போதைப் பொருட்கள், அதிகப்படியான மது அருந்துதல், அதிக எடையுடன் இருப்பது, அறவே உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.

புகைப்பழக்கம், போதை பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சிகள் குறிப்பாக சைக்கிளிங், நீச்சல் பயிற்சி, வேகமான நடை பயிற்சி, இடுப்பு தசைகளை வலுவாக்கும் ஹெகல் உடற்பயிற்சியை அவரவர் உடல் வன்மைக்கேற்றவாறு செய்ய வேண்டும்.

சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும். கீரைகளில் நறுந்தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, அறுகீரை இவைகளுள் ஏதேனும் ஒன்றை புளி நீக்கி சமைத்து நெய் சேர்த்து காலையில் மாத்திரம் 40 நாள் உண்டு வர ஆண்மை பெருகும்.

1) அமுக்கரா சூரணம், 1 கிராம், நாகப்பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

2) சாலாமிசிறி லேகியம், 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

3) மதன காமேஸ்வர லேகியம், 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

4) முருங்கைப்பூ லேகியம், 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

சித்த மருத்துவ மூலிகைகளில் நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு, மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, நிலப்பனை கிழங்கு, வாலுழுவை, மதன காமப் பூ, பூனைக்காலி விதை, ஆலம் விதை, அரச விதை, அத்தி விதை, நீர்முள்ளி விதை, சாரப்பருப்பு இவைகள் உடலுக்கு வலுவைத் தந்து நரம்புகளை உறுதியாக்கி தாம்பத்தியத்தில் திருப்தியை தருபவை ஆகும். இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது அவசியம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com