புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஷாகீன்பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள கலிந்தி குஞ்ச் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, மார்ச் 1-ந் தேதி, அந்த சாலையில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவோம் என்று இந்து சேனா என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அந்த அமைப்பினருடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று ஷாகீன்பாக் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக, போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷாகீன்பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்களுக்கு இடையே மோதலை தவிர்ப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி திரும்பி வருகிறது. நேற்று அமைதி நிலவியது. ஆனாலும் பதற்றமாக காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்புக்கிடையே, பொதுமக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், நம்பிக்கை ஏற்படுத்த உள்ளூர் மக்களுடன் பேசி வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லி பகுதி மக்களை வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.