

மும்பை,
மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக் அயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் அயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் அயுக்தாவை ஏற்படுத்த வலியுறுத்தியும் அன்னா ஹசாரே காந்தி நினைவு தினமான கடந்த புதன்கிழமை தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார். நேற்று அவரது உண்ணாவிரத போராட்டம் 5-வது நாளாக நீடித்தது.
அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று அகமத்நகர்-புனே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.