

தென்காசி,
தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துராஜ் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். முத்துராஜ் தினமும் காலையில் அதே ஊரில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சென்றுவிட்டு வருவது வழக்கம். அதுபோன்று கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அவனது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கிணற்றில் விழுந்து சாவு
இந்தநிலையில் நேற்று காலையில் சுந்தரபாண்டியபுரம் பெட்டைகுளம் அருகில் உள்ள கிணற்றில் முத்துராஜின் உடல் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கிணற்றில் கை கால் கழுவுவதற்காக முத்துராஜ் இறங்கியபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.