10 மாத குழந்தை கடத்தி கொலை உடல் கிணற்றில் வீச்சு

10 மாத ஆண் குழந்தையை கடத்தி கொன்று உடலை கிணற்றில் வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
10 மாத குழந்தை கடத்தி கொலை உடல் கிணற்றில் வீச்சு
Published on

புனே,

சத்தாரா மாவட்டம் பட்டான் தாலுகா கலஜ் கிராமத்தை சேர்ந்தவர் பகவத். இவரின் 10 மாத மகன் ஓம்கார். சம்பவத்தன்று மாலை வீட்டின் வெளியே உள்ள வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போய் விட்டான். இதனால் பெற்றோர் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

எங்கும் கிடைக்காமல் போனதால் பகவத் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து 2 நாட்கள் கழித்து அங்குள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடல் மீட்பு

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அது காணாமல் போன குழந்தை ஓம்கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பகவத்திடம் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலர் பகவத்திடம் வாக்குவாதம் செய்து சண்டை போட்டு உள்ளனர். இதனால் அவர் மீது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். போலீசார் குழந்தையை கடத்தி கொன்ற ஆசாமிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com