2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பொங்கலூரில், 2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது.
2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பொங்கலூர்,

பொங்கலூரில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த இளம்பெண் எழுதி வைத்து விட்டு சென்ற உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தேவிகா (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரநாராயணன் தனது குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சங்கரநாராயணன், தேவிகா மற்றும் அவருடைய குழந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சை முடிந்து குணமான பின்னர் தேவிகா தனது குழந்தையுடன் ஓய்வு எடுக்க திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஏ.ஆர்.நகரில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். சங்கரநாராயணன் திருமங்கலம் சென்று ஓட்டலை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தேவிகாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தேவிகாவின் தம்பி ராஜ்குமார் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூங்கினார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தேவிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து அறையில் தூங்கிய ராஜ்குமார், கண் விழித்து பார்த்தபோது, தூக்கில் தனது அக்காள் தேவிகா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.
உடனே இது குறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தேவிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தேவிகா தற்கொலை செய்து கொண்ட அறையில் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த அறையில் ஒரு கடிதம் இருந்தது. இந்த கடிதத்தை தேவிகா எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் வருமாறு:-
எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்தேன். இந்த சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இதனால் யாரும், யாரையும் சொல்ல வேண்டாம். சண்டை போட வேண்டாம். என் குழந்தையையும், என்னுடன் அழைத்து செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. நான் யாருக்காவது எந்த கஷ்டமாவது கொடுத்து இருந்தால் மன்னித்து விடுங்கள். என் கணவர் வாங்கிய கடனை கட்டி, என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று நம்புகிறேன். நான் போகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கலூரில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com