

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்டது தேவர்பெட்டா வனப்பகுதி. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் ஜவளகிரி அருகே பேலக்கரை என்ற இடத்தில் 6 வயதுடைய பெண் குட்டி யானை ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் பிரபு, ஜவளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் குட்டி யானை சாப்பிட்ட உணவால் ஏதோ கோளாறு ஏற்பட்டு பெருங்குடல் வலியால் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி யானையின் உடலை அதேபகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.
குட்டி யானை இறந்தது குறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.