சிறந்த தோற்றமே நல்ல அறிமுகம்

அழகான தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான அளவுகோல் அனைவருக்கும் ஒரே மாதிரியானதல்ல.
சிறந்த தோற்றமே நல்ல அறிமுகம்
Published on

அழகான தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான அளவுகோல் அனைவருக்கும் ஒரே மாதிரியானதல்ல. அதனால் யாருக்கு என்ன மாதிரியான ஆடை அதிக அழகுதரும்? அழகோடு சேர்த்து ஆளுமைத்தன்மையையும் வளர்ப்பது எப்படி? என்பதை எல்லாம் ஒவ்வொரு தனி மனிதருக்கும்தக்கபடி கற்றுத்தர இமேஜ் கன்சல்ட்டன்ட் என்ற ஆளுமைப் பண்பு வளர்ப்பு நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் தோற்றம், உடல்மொழி, குணாதிசயம் போன்றவைகளை மேம்படுத்து கிறார்கள்.

நேஹா குப்தா மும்பையை சேர்ந்த இமேஜ் கன்சல்ட்டன்ட். அவர் சொல்கிறார்:

பேஷன் என்பது மனிதர்களை புதுமையாக்குகிறது. அது ஒவ்வொரு மனிதரிடமும் வசீகரமான மாற்றத்தை உருவாக்கக்கூடியது. இது சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் இது அவசியமானது. நாம் அழகாகத் தோன்ற விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் தேவையில்லை. நாம் அன்றாடம் அணியும் எளிமையான உடையிலேயே அழகாக தோற்றமளிக்கலாம். அழகான தோற்றம் எப்போதுமே நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். சமூகத்தில் நம்மை உயர்த்திக்காட்டும் என்று கூறும் நேஹா குப்தா, 15 ஆண்டுகளாக இந்த துறையில் ஆலோசகராக பணிபுரிகிறார்.

எனது அனுபவத்தில் பலதரப்பட்ட பிரபலங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒருவரை பார்க்கும்போதே அவர் எந்த மாதிரியாக உடை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிடுவேன். பெரும்பாலும் சினிமா நடிகர் நடிகை களின் பேஷன்களை சாமான்ய மக்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பலரும் அவர்களைப் போல தோற்றமளிக்க விரும்புகிறார்கள். அது தவறில்லை. அவர்களுக்கேற்ற பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக எல்லோருமே உடைகள் மூலம் இளமையாக தோன்ற ஆசைப்படுகிறார்கள். மனிதர்கள் அணியும் ஆடை மூலம் பேஷனில் பல வருடங் களுக்கு முன்னோக்கியும் செல்லலாம். பல வருடங்களுக்கு பின்னோக்கியும் செல்லலாம்.

தற்போது ஆடை, அணிகலன்களுக்கு மனிதர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் தனக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க முடியாமல் பலரும் குழம்பு கிறார்கள். அவர்களது குழப்பத்தைப் போக்க என்னைப் போன்ற ஆலோசகர்கள் துணைபுரிகிறார்கள் என்று கூறும் நேஹா குப்தா, பேஷன் ஆர்வத்தால் மக்களின் ஆரோக்கியத்திலும் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் அழகாக தோன்றமுடியும். தோற்றத்தில் கவனம் செலுத்தும்போதுதான் பலருக்கும் உடல் பருமனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன். குண்டானவர் களிடம் நான், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஒல்லியானால் இந்த உடையை அணிந்து இப்படி தோற்றம் அளிக்கலாம் என்று கம்ப்யூட்டரில் வடிவமைத்துக் காட்டுவேன். அதைப் பார்த்து அவர்கள் அசந்து விடுவார்கள். பின்பு அவர்களுக்குள் ஒரு வேகம் வரும். அந்த அழகான தோற்றத்தைப் பெற போராடு வார்கள். சிறிது காலம் கழித்து எடையை குறைத்துக்கொண்டு அழகாக திரும்பி வருவார்கள். அப்போது அவர்களுக்கு பொருத்தமான ஆடையை வடிவமைத்துக்கொடுப்பேன் என்கிறார்.

நேஹா குப்தாவிடம், அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அழகான தோற்றத்தைப் பெற என்ன செய்யவேண்டும்? என்று கேட்டபோது..

அவர்களது உடல் அமைப்புக்கும், நிறத்திற்கும் ஏற்ற உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அழகிய காலணிகள் அவசியம். முகத்தில் கொஞ்சம் சிரிப்பு. கம்பீரமான நடை. இவைகளே போதுமானது. இப்போது வரும் பிராண்டட் உடைகள் நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கின்றன. சிலருக்கு கண்களுக்கு அடியில் கருப்பு வளையம் தோன்றி வயதான தோற்றத்தை தரும். அதை நீக்க பல வழிகள் உள்ளன. முகம் அழகாகத் தோன்ற, கண்ணாடிகளின் பங்களிப்பு மிக முக்கியம். பொருத்தமான பிரேம்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

என்னிடம் ஆலோசனை கேட்க வருபவர்களில் பெரும்பாலான பெண்கள், தங்கள் அழகில் என்ன குறை இருக்கிறது என்று பட்டியல் போடும்படி சொல்கிறார்கள். எந்தக் குறையுமில்லை. ஆனால் தோற்றத்தில் மாற்றம் தேவை என்று சொல்லுவேன். தோற்றத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்தவேண்டும். அந்த மாற்றத்தை சரியாக உருவாக்க இமேஜ் கன்சல்ட்டன்ட் அவசியம். அதிக செலவில்லாமல் நம்மை அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த சமூகத்தில் மனிதர்களின் அறிவு, அந்தஸ்து, குணம், நடத்தை, செயல் திறன் எதுவுமே வெளியே தெரிவதில்லை. அவர்கள் அணியும் ஆடையும், அவர்களது தோற்றமுமே அவர்களை முழுமையாக வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கிறது. அதனால் நல்ல தோற்றம் என்பது நம்மைப் பற்றிய நல்ல அறிமுகம் என்று நேஹா குப்தா கூறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com