10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குமரியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 89 சதவீதம் பேர் வருகை

குமரியில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு 89 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குமரியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 89 சதவீதம் பேர் வருகை
Published on

நாகர்கோவில்,

கொரோனா பரவலை தொடர்ந்து குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் 2020-21 கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது.

பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

குமரியில் 487 பள்ளிகள் திறப்பு

இதனைதொடர்நது ஜனவரி 19-ந் தேதி (அதாவது நேற்று) முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 487 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வகுப்பு தோழர்களை பார்த்த மகிழ்ச்சியில் குதூகலத்துடன் காணப்பட்டனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் சீருடையிலும், சிலர் வண்ண உடைகளிலும் வந்திருந்தனர்.

அரசு விதிமுறைகள்

அரசு விதிமுறைப்படி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் நிறுத்தப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்பே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே சானிட்டைசர் மற்றும் கைகளை கழுவ தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது.

வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 25-க்கும் அதிகமான மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டனர். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அரசு விதிகளை கடைபிடிப்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

கலெக்டர் ஆய்வு

கல்குளம் தாலுகா கடியப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசின் நறிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நேற்று காலை கோட்டாட்சியர் மயில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதேபோல் நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி, கவிமணி தேசிக விநாயகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் அரசு அறிவித்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என துணை கலெக்டர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

89 சதவீதம் மாணவர்கள்

மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பில் 25,619 மாணவர்களும், பிளஸ்-2 வகுப்பில் 23,473 பேரும் பயின்று வருகின்றனர். இதில் நேற்று 10-ம் வகுப்பில் 21,999 மாணவர்களும், பிளஸ்-2 மாணவர்கள் 19,763 பேரும் வந்திருந்தனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் 89 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

முதல் நாளான நேற்று பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மேலும், இறைவணக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. பள்ளி வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அரசு வழிமுறைகள் குறித்த வாசகங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com