நாகர்கோவிலில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை அனுமதியின்றி கட்டப்பட்ட கடைக்கு ‘சீல்’ வைப்பு

நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் ‘சீல்கி’ வைத்தனர். மேலும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளின் சுற்றுச்சுவர்களும் அகற்றப்பட்டன.
நாகர்கோவிலில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை அனுமதியின்றி கட்டப்பட்ட கடைக்கு ‘சீல்’ வைப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே செம்மாங்குடி சாலை திருப்பத்தில் ஒரு பழைய கடை இருந்தது. அந்த கடையை புதுப்பித்து கவரிங் கடை திறக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செம்மாங்குடி சாலையை அகலப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த பகுதியில் கடை எதுவும் கட்டக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருந்ததாக தெரிகிறது.

ஆனால் அதை மீறி கடை கட்டப்பட்டது. மேலும் அனுமதியின்றி கடையும் திறக்கப்பட்டது. இந்தநிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர்கள் மகேஸ்வரி, துர்காதேவி, கெவின்ஜாய், சந்தோஷ்குமார் மற்றும் ஊழியர்கள் கவரிங் கடைக்கு சென்று மூடி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

சுற்றுச்சுவர் இடிப்பு

இதேபோல் நாகர்கோவில் இருளப்பபுரம் அருகே உள்ள வட்டவிளையில் மாநகராட்சி நகர்நல மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்கு சொந்தமான இடத்தை அங்கு குடியிருப்பவர்களில் 5 பேர் ஆக்கிரமித்து தங்களது வீட்டுக்கான சுற்றுச்சுவர்களை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கும் அதிகாரிகள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளின் சுற்றுச்சுவர்களை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com