வடகாடு பகுதியில்வாழைத்தார் விலை குறைவு - விற்பனை மந்தம்

வடகாடு பகுதியில் வாழைத்தார் விலை குறைந்துள்ளதோடு, விற்பனையும் மந்தமாக உள்ளது, என்று விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
வடகாடு பகுதியில்வாழைத்தார் விலை குறைவு - விற்பனை மந்தம்
Published on

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், தடியமனை, எல்.என்.புரம், ஆவனம் கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், கறம்பக்காடு போன்ற ஊர்களில் அதிகப்படியான அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மொத்த வியாபாரிகள் மூலமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் முன்வராததால் வாழைத்தார்கள் மரங்களிலேயே பழுத்து அணில், பறவைகளுக்கு உணவானது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் வடகாடு, மாங்காடு, ஆவனம் கைகாட்டி போன்ற ஊர்களில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாக, நல்ல தரமான வாழைத்தார் எடை கணக்கில் கிலோ ரூ.7 மற்றும் ரூ.8 என்ற விலையில் வாங்கப்படுகிறது. 4 மற்றும் 5 அடி உயரம் உள்ள பெரிய வாழைத்தார் 30 கிலோ வரை எடை வரும் என்றும், இந்த சீசனில் ரூ.1,200 வரை விலை போகக்கூடிய வாழைத்தார் ஒன்று தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே விலை போகிறது. மற்ற சாதாரண வாழைத்தார்கள் ரூ.40 மற்றும் ரூ.50 என்ற விலையிலேயே வாங்கப்படுகிறது. விற்பனையும் மந்தமாக உள்ளது.

இவ்வாறு கமிஷன் கடைகளில் இருந்து வாங்கப்படும் வாழைத்தார்கள் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலமாக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தொடரும் ஊரடங்கு காரணமாக மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை போன்ற ஊர்களில் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் முன்வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.இப்பகுதிகளுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டால் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி ஆனாலும் அங்கேயும் விலை குறைவாகவே வாங்கப்படுவதாகவும் வியாபாரிகள் கூறினர். இதனால் வாழை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com