கரடிகள் நடமாட்டம் எதிரொலி: தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கரடிகள் நடமாட்டம் எதிரொலியாக வண்டியூர் பகுதியில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க தண்டோரோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரடிகள் நடமாட்டம் எதிரொலி: தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Published on

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வண்டியூர் கிராமம். இந்த மலைப்பகுதிகளில் மான், குரங்கு, கரடி, யானை, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவை உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக கரடிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

மலையடி வாரப்பகுதிகளில் அதிகளவில் நாவல்மரங்கள் உள்ளன. தற்போது நாவல் பழ சீசன் தொடங்கியுள்ளதால் மரத்தில் இருந்து விழும் நாவல் பழங்களை தின்பதற்காக கரடிகள் அடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு படையெடுக்கின்றன. நேற்று முன்தினம் காலை தோட்டத்துக்குள் புகுந்த கரடிகள், விவசாயிகள் 2 பேரை கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த விவசாயிகள் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து மாலை நேரத்தில் தோட்டங்களுக்கு 4 கரடிகள் கூட்டமாக வந்துள்ளன. இதைக்கண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கண்டமனூர் வனச்சரகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், பட்டாசு வெடித்து கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் கரடிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக வேண்டும் என்று வனத்துறை சார்பில் தண்டோரா, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இரவு முதல் அதிகாலை வரை பொதுமக்கள், விவசாயிகள் யாரும் விவசாய தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கரடி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் அங்கு முகாமிட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com