தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு விபத்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; 6 பேர் படுகாயம்

நாகமங்களா அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானதில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு விபத்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; 6 பேர் படுகாயம்
Published on

மண்டியா,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பர்துல்லா(வயது 22) மற்றும் இர்பான்(20). இவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். இவர்களுடன் அதே கல்லூரியில் படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 6 மாணவர்களும் புறப்பட்டனர்.

இவர்கள் 8 பேரும் மங்களூருவில் இருந்து ஒரு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா பெல்லூரு கிராஸ் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி பர்துல்லாவும், இர்பானும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மற்ற 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து பெல்லூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதையடுத்து விபத்தில் பலியான பர்துல்லா, இர்பான் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com