பஸ் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் போராட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் போராட்டம்
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து பஸ் கட்டண உயர்வை ரத்து செய், இலவச பஸ்பாசை ரத்து செய்யாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரா, பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவிகள் கோஷங்கள் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவிகள் சங்க தலைவி சூர்யா மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது அவர், பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டீர்கள். இனிமேல் வகுப்புகளுக்கு செல்லுங்கள். இந்திய மாணவர் சங்கம் என்பது ஒரு கட்சியின் அமைப்பு. அவர்களுடன் இணைந்து நீங்கள் போராடுகிறீர்கள். ஏதாவது கைகலப்பு ஏற்பட்டு மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தால், உங்களது எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு மாணவிகளை அழைத்து செல்லுங்கள் என அறிவுறுத்தினார்.

எங்களை யாரையும் மாணவிகள் மத்தியில் பேச விடமறுக்கிறார்கள் என அவர்கள் கூறவே, போலீசார் உதவியுடன் மாணவிகள் மத்தியில் சங்க நிர்வாகிகள் பேசினர். நமது எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டோம். நமக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதனால் வகுப்புகளுக்கு செல்லுங்கள் என்று கூறினர். அதற்குள் அரவிந்தசாமி குறுக்கிட்டு, தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடக்கிறது. தஞ்சையில் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தான் போராட்டத்திற்கு அடித்தளம் போட்டுள்ளர்கள். வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்து வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்கள். போராட்டத்தை முடித்துவிட்டு யாரும் வகுப்புகளுக்கு செல்ல வேண்டாம். வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார்.

இதையடுத்து மாணவிகள் கூட்டத்திற்குள் பெண் போலீசார் சென்று, வெயிலில் அமர்ந்து இருக்காமல் வகுப்புகளுக்கு செல்லுங்கள். இல்லையென்றால் வீட்டிற்கு புறப்பட்டு செல்லுங்கள் என கூறி கூட்டத்தை கலைத்தனர். உடனே பாதிக்கு மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளுக்கு செல்வதற்காக கல்லூரிக்குள் சென்றனர். இதை பார்த்த அரவிந்தசாமி ஓடிச் சென்று கல்லூரி இரும்பு கதவை மூடி, வீட்டிற்கு செல்லுமாறு மாணவிகளிடம் கூறினார். இதை பார்த்த போலீசார் சென்று அவரை அப்புறப்படுத்திவிட்டு, கதவை திறந்துவிட்டனர். பின்னர் மாணவிகள் பலர் கல்லூரிக்குள் சென்றனர்.

மீதி உள்ள மாணவிகளை அந்த இடத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த போராட்டம் காலை 9.30 மணி முதல் காலை 11.15 மணி வரை நடைபெற்றது. கல்லூரியில் படிக்கும் 4,200 மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டம் முடிந்தவுடன் சுமார் 2 ஆயிரம் பேர் மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். இதேபோல தஞ்சை கரந்தையில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மணிநேரம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com